காசாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் இஸ்ரேலை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன், செல்வப் பெருந்தகை, வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும் என்ற தலைப்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டன உரையாற்றினார்.
காசாவில் நடைபெறும் இனப்படுகொலை மனதை உலுக்குவதாக முதலமைச்சர் தெரிவித்தார். 26 ஆயிரம் குழந்தைகள் பாலஸ்தீனத்தில் பெற்றோரை இழந்து இருப்பதாகவும், உணவுப் பொருட்கள், மருந்துகள், பால் பவுடர் எடுத்துச் சென்ற தன்னார்வலர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

காசாவின் நடக்கும் இரக்கமற்ற படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிற நாட்டு விவகாரம் என்று பார்க்க கூடாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். காசாவை மறு கட்டமைப்பு செய்து மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் 14ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதிப்பெயர் நீக்குங்கள்... நவம்பர் 11 வரைக்கும் தான் டைம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!
இதனிடையே, நேற்றைய தினம் இஸ்ரேல் ராணுவ தளவாட நிறுவனங்கள் பங்கேற்கும் முதலீடு மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக விமர்சித்துள்ளது. நேற்று இஸ்ரேல் ராணுவ தளவாட நிறுவனங்கள் பங்கேற்கும் முதலீடு மாநாட்டில் பங்கேற்று வாழ்த்திவிட்டு, இன்று, காசா உரிமைக்காக போராட்டம் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோஷூட் நடத்துவதாக விமர்சித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்றும் தென்னை மர சின்னத்துல ஒரு குத்து, பனை மர சின்னத்துல ஒரு குத்து என்றும் யாரு சார் நீங்க எனவும் விமர்சித்து உள்ளது.
இதையும் படிங்க: உள்ளூர் நிலை ஊசலாடுது... உலக அரசியல் தேவையா? முதல்வரை விளாசிய அண்ணாமலை