பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், சமூக சீர்திருத்தம், சாதி எதிர்ப்பு, சமூக சமத்துவம், பெண்கள் உரிமை, பகுத்தறிவு உள்ளிட்ட கருத்துகளுக்காக ஈ.வெ.ராமசாமி ஆற்றிய நீண்டகாலப் பணிகளை நினைவுகூர்வதற்காகும். தமிழ்நாடு அரசு செப்டம்பர் 17ஆம் தேதியை “சமூகநீதி நாள்” ஆகக் கடைப்பிடித்து வருகிறது.
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமூகநீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் இன்று காலை 11 மணிக்கு சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியார் பிறந்த இடமான ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் பிறந்தநாள் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரியார் குறித்த கருத்தரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றம், மரக்கன்று நடுதல், ரத்ததானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும் இன்று பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: ஈரோட்டில் பெரியாருக்கு இப்படியொரு அவமானமா?... விநாயகருக்காக கொள்கைத் தலைவரை விட்டுக்கொடுத்த தவெக...!
பெரியார் பிறந்தநாளுடன் திமுக தொடங்கிய நாளும் வருவதால், திமுக சார்பில் ஆண்டுதோறும் “முப்பெரும் விழா” தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தினம் பெரியார் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாத்துக்களை தெரிவித்துள்ளார். “தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட! வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!” என தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெரியார் சிலை விவகாரம்! கனிமொழி குறித்த சர்ச்சை பதிவு! எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் முக்கிய தீர்ப்பு!