வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை திமுக வஞ்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு ஊழியர்களை இணைப்பதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நயினார் நாகேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் கைது நடவடிக்கைகள் கண்டனம் தெரிவித்தார்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஊராட்சி செயலாளர்கள் போராடுவதாக குறிப்பிட்டுள்ளார். போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தனது திறனற்ற நிர்வாகத்தால் முறையான வசதிகளின்றியும், கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாமலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலும் சீரழிந்து வரும் ஊரக நிர்வாகத்தை மேலும் சிதைக்கும் வண்ணம், ஊராட்சி செயலாளர்கள் நலனையும் திமுக அரசு உதறியெறிவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: TNPSC குளறுபடிகள்... TRANSFER போதுமா? நீதி விசாரணை நடத்த MP சு. வெங்கடேசன் வலியுறுத்தல்..!
தேர்தல் நெருங்கியதும் ஏனோதானோவென அவசரகதியில் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து, பெருமை பீற்றிக் கொள்வதில் காட்டிய அக்கறையில் சிறு துளியேனும் அதனைச் செயல்படுத்துவதிலும், அனைத்துத்தரப்பட்ட ஊழியர்களை இணைப்பதிலும் திமுக அரசு அக்கரை காட்டவில்லை என்று குற்றம் சாட்டினார். திமுகவின் அரசை இனி என்றும் அரசு ஊழியர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய திமுக அரசுக்குத் தேர்தலில் ஏமாற்றத்தைப் பரிசளிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி..! டாடா நிறுவனத்தை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர்..!