நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி, கோவை பிரதான சாலையில் பேரணி நடத்த அனுமதி கேட்டதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அனுமதி கேட்ட பகுதியில் பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிறுத்தம் இருப்பதால் கூட்டம் நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஊர்வலம் நடத்த அனுமதி கேட்ட பகுதி, அனுமதி வழங்க முடியாத வழித்தடமாகும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதையும் மீறி அனுமதி வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் பாஜகவுக்கு ரிட்டன்.. 25 முக்கிய நிர்வாகிகள் அதிரடி முடிவு.. சைலண்ட்டாக சம்பவம் செய்த நயினார்!!
யாருக்கும் காரணமில்லாமல் அனுமதி மறுக்கவில்லை என்றும், கட்சி சார்பாக ஊர்வலம் செல்லவே அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாற்று இடத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கோவையில் 12 பகுதிகளில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த இடங்களில் ஊர்வலம் செல்லலாம் என்றும், தேசியக் கொடி ஏந்துவதை அரசு தடுக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிரிழந்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடியை பிடித்து செல்ல தடைவிதிக்கப்படுவது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? அமைதியாகக் கொடி பிடித்து செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது? அவர்களும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயல்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை, பாகிஸ்தானிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ உள்ளதா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். “திமுக ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை, பாஜக ஊர்வலம் செல்லக் கூடாது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்து கொள்ள மாட்டார்களா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அனுமதி வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். நாட்டின் எந்தப் பகுதியிலும் தேசியக் கொடியை ஏந்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றும், இந்த விவகாரத்தில் அரசினுடைய செயல்பாடு சரியில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசியக் கொடியை ஏந்தி செல்பவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பேரணி நடத்துவது தொடர்பாக காவல்துறையிடம் கலந்து ஆலோசித்து முடிவைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!