விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்கள் திருப்பி ஒப்படைக்கக் கூடாது என்ற சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுக்குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னையில் சில நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் பயணித்தபோது, குழந்தை தவறி விழுந்து லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறைக்கு "விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்கள் சிறைப்பிடிக்க வேண்டும்" என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டதாக செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.

மனித உயிர்களின் மதிப்பை வாகன உரிமையாளர்கள் ஆகிய நாங்கள் நன்கு அறிவோம். சாலை விபத்து என்பது எதிர்பாராதவிதமாக நடைபெறும் ஒன்று. ஓட்டுநர்களோ பொதுமக்களோ வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்துவதில்லை. இவ்வகை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஓட்டுநர் பயிற்சி, மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஒரு விபத்து நிகழ்வதற்கு சாலை விதிகளை கடைபிடிக்காத சாலை பயனாளர்கள், கண் மறைவு பிரதேசங்கள், சாலைகள் போன்று பல காரணங்கள் உள்ளது. ஒரு விபத்து நடந்தவுடன் அதனை புலனாய்வு செய்து சாட்சிகளை விசாரித்து அனைத்தையும் சரிபார்த்த பின்பு தான் குற்றவாளி யார் என்று உறுதிப்படுத்த முடியும்.
இதையும் படிங்க: ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது முருகன் மாநாடு... அடித்து சொல்லும் வானதி சீனிவாசன்!!

ஆனால் விபத்து நடந்த உடனே கனரக வாகனங்கள் மட்டுமே குற்றவாளிகள் என்று முடிவு செய்வது தவறான முன்னுதாரணமாகும். எனவே விபத்து நேரிட்டால் 100 நாட்கள் வரை பேருந்துகளை விடுவிக்க கூடாது என்ற சென்னை காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேருந்து உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும். ஒரு ஆம்னி பேருந்தை வாங்குவதற்கு ரூபாய் 75 முதல் 2 கோடி வரை நாங்கள் முதலீடு செய்கிறோம். விபத்து நேரிட்டால் பேருந்து உரிமையாளர்களாகிய நாங்கள் பெரும் பாதிப்படைவோம் என்பதைக் கருத்தில் கொண்டு நாங்களும் விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இருப்பினும் யாரும் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்து விபத்து ஏற்படும்போது எங்கள் வாகனங்களை 100 நாட்கள் சிறை பிடித்தால் அந்த வாகனத்திற்கு சாலை வரியாக அரசுக்கு காலாண்டிற்கு குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், பேருந்து மாதத்தவணை ரூபாய் 2 லட்சம் மற்றும் ஓட்டுநர் சம்பளம் பணியாளர்கள் சம்பளம் என முழுமையான நிதிநெருக்கடியும் பயணிகள் சேவையிலும் பாதிப்பும் ஏற்படும். ஆகையால் மேற்கண்ட சட்டத்தை மீறிய உத்தரவை ரத்து செய்தும் சிறை பிடித்த வாகனங்களை விடுவித்தும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கை; பொம்மை முதல்வர்... ஸ்டாலினை கழுவி ஊற்றிய ஈபிஎஸ்!!