ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகைக் கடனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

பொதுமக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், விவசாயிகள் தங்கள் தொழிலை மேற்கொள்வதற்கும், கிராமப்புற மேம்பாட்டிற்கும் இன்றியமையாததாக விளங்குவது நகைக் கடன் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நகைக் கடனை பெறுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீளா துயரத்திற்கு மக்கள் செல்வார்கள்.. புதிய விதிகளை திரும்ப பெறுக.. ரிசர்வ் வங்கிக்கு விஜய் வலியுறுத்தல்..!

தங்கத்தை அடமானம் வைக்கும்போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும்; அடமானம் வைக்கப்படும் நகைக்கான ஆதாரத்தை நகைக் கடன் பெறுவோர் அளிக்க வேண்டும்; தங்க நகைகளில் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும்; 24 காரட் தங்க நகையாக இருந்தாலும் 22 காரட் மதிப்பிலேயே கடன் வழங்க வேண்டும்; ஒரு கிலோ வரையிலான தங்க நகைகள் மட்டுமே அடமானம் வைக்கப்பட வேண்டும்; இவ்வாறு வைக்கப்படும் நகையில் 50 கிராம் மட்டுமே அச்சிடப்பட்ட நாணயங்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கட்டுப்பாடுகளை விதித்து அண்மையில் பாரத ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் நகைக் கடன் பெறுவது என்பது எட்டாக் கனியாகிவிடும்.

பொதுவாக நகைக் கடன் பெறுபவர்கள் ஏழையெளிய கிராமப்புற மக்களும், விவசாயிகளும், குறு மற்றும் சிறு தொழில்களை மேற்கொள்பவர்களும்தான் என்ற நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் நகைக் கடனுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ரத்து செய்யப்பட வேண்டுமென்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், இரண்டு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் சிறிய நகைக் கடனுக்கு மட்டும் விலக்கு அளிக்குமாறு பாரத ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.


மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், ஏற்கெனவே இருந்த நடைமுறை தொடர்ந்தால்தான் ஏழையெளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும், கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும், எனவே நகைக் கடன் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மூதாதையர்கள் வைத்துவிட்டு போன தங்க நகைகளுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பது, தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்குவது, 24 காரட் தங்கத்திற்கும் 22 காரட் மதிப்பிலேயே கடன் வழங்குவது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாத நெறிமுறைகளாக இருக்கின்றன என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
பொதுமக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், பாரத ரிசர்வ் வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்ட நகைக் கடனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென்று மத்திய அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீளா துயரத்திற்கு மக்கள் செல்வார்கள்.. புதிய விதிகளை திரும்ப பெறுக.. ரிசர்வ் வங்கிக்கு விஜய் வலியுறுத்தல்..!