பழனியில் ஏற்கனவே ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நில மோசடி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அதே பகுதியில் ரூ.60 கோடி மதிப்பிலான நகராட்சி அரசு நிலம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழனி கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டமாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், பழனி நகராட்சிக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான அரசு நிலம் தனியாரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!
பழனி நகரில் அமைந்துள்ள 55 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் கடந்த 6-ஆம் தேதி ரவிச்சந்திரன் என்பவர் தனது மகன் மனோஜ்குமாருக்கு தான செட்டில்மென்ட் பத்திரமாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நாளில், அந்த நிலத்தை பாஜகவைச் சேர்ந்த சௌந்தரபாண்டி என்பவருக்கு விற்பனை செய்ய மனோஜ்குமார் கிரய ஒப்பந்தம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தான செட்டில்மென்ட் பத்திரத்தில் அந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 67 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், வெறும் ரூ.20 லட்சத்திற்கு விற்பனை செய்ய கிரய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரவிச்சந்திரன் எழுதி வழங்கிய தான செட்டில்மென்ட் பத்திரத்தை, எந்தவித மூலப் பத்திரங்களையும் சரிபார்க்காமல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வருவாய்த் துறை ஆவணங்களில் அரசு நிலம் என்று தெளிவாக பதிவாகியுள்ள நிலத்திற்கு, போலி ஆவணங்கள் தயாரித்து ஒரு தான செட்டில்மென்ட் ஆவணமும், ஒரு கிரய ஒப்பந்த ஆவணமும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "கோயில் நிலம் தொடர்பான கிரய ஆவணம் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்ததால், அந்த கிரயத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், ஜஸ்டின் மணிகண்டன் பதவியேற்ற பிறகு இதுபோன்ற ஏராளமான போலி ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று குற்றம்சாட்டினர்.
இதனிடையே, பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் சேதுபதி வெள்ளத்துரை உள்ளிட்ட நான்கு பேரும் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, நான்கு பேரையும் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு.! பின்னணியில் சென்னை உயரதிகாரிகள்? பரபரப்பு விசாரணை!