பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சி நடப்பதாக பாமக வேட்பாளர் திலகபாமா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு “சம்மர் பாக்ஸிங் கேம்” முகாமை திலகபாமா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மாணவர்கள் பங்கேற்ற பாக்ஸிங் பயிற்சிகளை நேரில் கண்டு உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திலகபாமா, பெரம்பூர் தொகுதியில் அரசியல் மாற்றத்திற்கான மனநிலை வாக்காளர்களிடையே உருவாகி வருவதாக தெரிவித்தார். தொகுதி முழுவதும் அதிமுக கூட்டணிக்கு சாதகமான அலை வீசுகிறது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் கூடவே இருக்குற திருட்டு பையன் தான் அதை செஞ்சிருக்கான்: சரத்குமார் ஆவேசம்...!
மேலும் பேசிய அவர், “திமுக தோல்வி பயத்தில் உள்ளது. அதனால் மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் டோக்கன் விநியோகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதோடு, “பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக சுமார் 5 கோடி ரூபாய் கொண்டு வரப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைந்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
மேலும், “இந்தத் தொகுதியில் பணிபுரியும் சில அதிகாரிகள், தற்போதைய எம்.எல்.ஏ.வின் பரிந்துரையில் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் நடுநிலையுடன் செயல்படாமல், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர்” என்றும் திலகபாமா குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகள் தேர்தல் சூழ்நிலையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!