புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருபவர்களை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். இந்தியா பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் அவநம்பிக்கையையும் பொய்களையும் பரப்பும் முயற்சிகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில், 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சாதனை நாட்டின் மக்களின் உறுதியான முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பலன் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகின் பல பகுதிகளில் பொருளாதார நிலைத்தன்மை பாதிக்கப்பட்டபோதிலும், இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தடைகள் மற்றும் சவால்களை கடந்து இந்தியா இந்த வளர்ச்சி வேகத்தை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக பொதுமறை திருக்குறள்! அதை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கலாமே! தாஷ்கன்ட் பல்கலையில் பிரதமர் மோடி பேச்சு
இதனிடையே, உலகம் தற்போது பல்வேறு மோதல்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார். பல நாடுகளில் போர் தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

7.8% growth.
Strong numbers.
Even stronger confidence. pic.twitter.com/ZVPpnAXrVU
— Narendra Modi (@narendramodi) September 1, 2026
இந்த சூழலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது முக்கியம் என்றும், உள்நாட்டு உற்பத்தி திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்கு தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேவையற்ற வெளிநாட்டு செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, வெறும் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்கு செல்வதையும், அத்தியாவசிய தேவைக்கு அதிகமாக தங்கம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒன்றிணைவோம்! போதைப்பொருளை ஒழிப்போம்! மன் கி பாத் நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்!