2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். பாமக 2 துருவங்களாக பிரிந்த நிலையில் ராமதாசும், அன்புமணியும் தனித்தனியாக கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா மாநிலம், வளர்ச்சிக்கான உரிமை மீட்பு, நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை, மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பன தான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்! பாமக தலைமையகம் தைலாபுரத்துக்கு மாற்றப்படுவதாக அதிரடி அறிவிப்பு..!
தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் மக்கள் உரிமை மீட்பு பயணத்திற்கான இலட்சினை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் உரிமை மீட்பு பயணத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அன்புமணியின் பயணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அக்கா, அண்ணன் அனைவரும் வரணும்... அழைப்பது அன்புமணிடா... நெருப்பாய் இருப்போம் வா வா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அன்புமணியின் ஒருங்கிணைப்பு பயணத்தை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அன்புமணியின் சூறாவளி சுற்றுப்பயணம்..! அதிரவிடும் பாமக.. புதிய இலட்சினை வெளியீடு..!