அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.திலகபாமா இன்று காலை கொடுங்கையூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வியாசன் நகர் நான்காம் எண் டாஸ்மாக் கடையில் விடியற்காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு, கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருவதை கண்டறிந்தார். அப்போது டாஸ்மாகிற்கு அருகே அமைந்துள்ள கே.ஜி.எஃப் பாரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை நடந்து வருவது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த திலகபாமா, போலீசார் வரும் வரை அங்கேயே காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் இந்த டாஸ்மாக் கடை தினமும் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், அதற்கு காவல்துறையும் உடைந்தை என குற்றச்சாட்டினர். திலகபாமாவின் புகாரை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
உள் பக்க அறையை பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்த டாஸ்மாக் ஊழியர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன் என திலகபாமா கறாராக தெரிவித்ததால், செய்வதறியாது திகைத்த போலீசார் அறையை திறக்க மீண்டும், மீண்டும் முயற்சித்தனர். அரசு விதித்த நேரப்படி 12 மணிக்கு திறந்திருக்க வேண்டிய மதுபானக்கடையை, விடியற்காலை 6 மணிக்கே திறந்து வைத்து, விடிய விடிய விற்பனை நடப்பதை சுட்டிக்காட்டிய திலகபாமா, இதனை காவல்துறை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினர். உடனடியாக அவரை சமாதானம் செய்த போலீசார், இனி எக்காரணம் கொண்டும் இந்த டாஸ்மாக் கடையை இயங்க விடமாட்டோம் என உறுதியளித்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டார். நடுத்தர மக்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் அதிகமுள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இப்படி 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருவது அப்பகுதியில் தொடர்கதையாகி வந்த நிலையில், இதனை துணிச்சலுடன் தட்டிக்கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: “விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”- பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?
இதையும் படிங்க: இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!