கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் திரு. அமுதன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது; தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காத தவெக அரசும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் வெறும் உறுதிமொழி எடுப்பதில் எந்தப் பயனுமில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் திரு. அமுதனை, சக மாணவர்களுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்திருப்பதாகக் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரியில் பயிலும் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும், அதனை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் மாணவர் அமுதன் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

போதைப் பொருள் குறித்து மாணவர் அமுதன் தெரிவித்த தகவலை ரகசியமாகப் பராமரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே, அத் தகவலை வெளியில் கசியவிட்டதாக மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இச் சம்பவத்தை மாணவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் எனக் கூறி, அமைச்சரும் காவல்துறையினரும் பிரச்சினையை மூடி மறைக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மாணவர்களுக்கு முன்னிலையில் வெறும் போதை ஒழிப்பு உறுதிமொழியை மட்டும் எடுத்துக்கொண்டு தவெக அரசும் முதலமைச்சர் விஜய்யும் காலம் தாழ்த்துவதில் எந்தப் பயனுமில்லை. மாணவர் அமுதன் அவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
கொலை வழக்கின் பின்னணியை மூடி மறைக்காமல், மாணவரின் மரணத்திற்கு நியாயமான நீதி கிடைக்கவும், குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: "வறட்சி எங்கே?.. புகழ்ச்சி மட்டுமே!" டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லை என மு.க.ஸ்டாலின் கண்டனம்!