தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நெல்லையில் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு புதிதாக உருவாக்கியுள்ள 'சிங்கப்பெண் அதிரடிப்படைக்கே' பாதுகாப்பு வழங்க, மற்றொரு தனி பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டிய அவலச் சூழலில்தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தற்பொழுது உள்ளது என்று சாடினார். உங்களிடம் உள்ள அமைச்சர்கள் முறையாகப் பணியாற்றவில்லை என்றால், உங்களது அரசே தானாகக் காணாமல் போய்விடும் என்றும், அதற்கு உங்கள் அமைச்சர்கள்தான் காரணமாக இருப்பார்கள் என்றும் எச்சரித்தார்.
கடந்த 40 நாட்களில் மட்டும் சென்னையைச் சுற்றி 20 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 15 போக்சோ வழக்குகளும் பதிவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மூன்று வயதுக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவமானப்படுத்தப்படும் ஒரு கேவலமான நிலைமை தமிழகத்தில் உள்ளது என்றார். அரசுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை விட, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், வெறும் விளம்பரங்களாலோ, பெயர்களை வைப்பதாலோ சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிவிட முடியாது என்றும் குறிப்பிட்டார். சில துறைகளுக்குச் செயல்படக் கால அவகாசம் கொடுக்கலாம், ஆனால் மின்சாரத் துறைக்கு மட்டும் எந்தவித அவகாசமும் கொடுக்க முடியாது என்றும், அப்படி அவகாசம் கொடுத்தால் மொத்த தமிழ்நாடே இருட்டாகிப் போய்விடும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாகக் கட்சிகள் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு, இது குதிரை பேரம் இல்லை, கழுதை பேரம் என்று விமர்சித்தவர், ஊரில் உள்ள கழுதைகளை அழைத்து வந்து விற்பனை செய்தால் கோளாறு உங்களிடமா அல்லது கழுதையிடமா என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், பிரதமர் மோடியின் 4,400 நாட்களுக்கும் மேலான ஆட்சி இந்தியாவை உலக நாடுகளின் வரிசையில் ஒரு தலைமைப் பண்பு கொண்ட நாடாக உயர்த்தியுள்ளது என்றார். 'பிரதமர் ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது அது 4 கோடி வீடுகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், பெண்களுக்குப் புகை இல்லாத சமையலறையை உருவாக்க 10 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதில் தமிழகத்தில் மட்டும் 40 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார். பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் 12 கோடி கழிப்பறைகளும், 58 கோடி ஏழைகளுக்கு வங்கிச் சேமிப்புக் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் ராஜீவ் காந்தி காலத்தில் 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைந்த நிலை மாறி, இன்று முழுத் தொகையும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக மக்கள் கைக்குச் சென்றடைகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!
மேலும் 70,000 கி.மீ தூரத்திற்கு நான்கு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், வந்தே பாரத் ரயில் திட்டங்கள் மற்றும் தமிழகத்தில் ரயில்வே இருவழிப் பாதை திட்டங்களுக்கு மாநில அரசு நிதி வழங்காத போதும் மத்திய அரசு முழு நிதியையும் ஏற்றுச் செயல்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தமிழை உலகின் மூத்த மொழி என்று ஐநா சபை வரை கொண்டு சென்றுள்ளார் என்றும், இலங்கைத் தமிழர்களுக்காகப் பல நலத்திட்டங்களை முன்னெடுத்து, மீனவர் பிரச்சினையில் மனிதாபிமானத்தோடு செயல்பட அழுத்தம் கொடுத்துள்ளார் என்றும் விவரித்தார். இறுதியாக, பிரதமரின் சாதனைகளை அனைத்துப் பெரியவர்களிடமும் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியே பாஜக மாநிலத் தலைவர் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தது என்று விளக்கமளித்த அவர், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!