திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 3 வயதுச் சிறுமியின் சடலம், உறவினர்கள் மற்றும் பொதுமக்களைத் திசைதிருப்பிப் பொன்னேரி மயானத்தில் இரவோடு இரவாக அடக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் தற்பொழுது மீண்டும் விடிய விடிய மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கிய இந்த 3 வயதுச் சிறுமியின் கொடூரக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியின் சடலத்தைக் கும்மிடிப்பூண்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரால் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு வந்தன. ஆனால், சடலத்தைக் கும்மிடிப்பூண்டியில் அடக்கம் செய்தால் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மேலும் தீவிரமடையும் எனக் கருதிய காவல்துறையினர், அங்கு திரண்டிருந்த பொதுமக்களையும், உறவினர்களையும் திடீரெனத் திசைதிருப்பியுள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் சிறுமியின் சடலத்தைப் பொன்னேரி மயானத்திற்குக் கொண்டு சென்று அங்கு அவசர அவசரமாக அடக்கம் செய்துள்ளனர்.
தங்களைக் காவல்துறையினர் திட்டமிட்டு ஏமாற்றி, சிறுமியின் சடலத்தைப் பொன்னேரியில் அடக்கம் செய்த விவரத்தை அறிந்த கும்மிடிப்பூண்டி பகுதி பொதுமக்கள் தற்பொழுது கடும் கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கியுள்ளனர். காவல்துறையின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கையைக் கண்டித்து, கும்மிடிப்பூண்டி பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பெண்கள் மீண்டும் திரண்டு அமர்ந்து தீவிரச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உடல் முழுவதும் ரத்தம்... கும்மிடிப்பூண்டி குழந்தை மரணம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் உருக்கமான பேட்டி!
குற்றவாளிகளுக்கு எவ்விதச் சமரசமும் இன்றி நீதிமன்றத்தின் மூலம் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பத்திற்கு உரிய நீதியும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடுக்கடுக்கான கண்டனங்களை எழுப்பி வரும் வேளையில், கும்மிடிப்பூண்டியில் நள்ளிரவிலும் நீடித்து வரும் இந்தப் பொதுமக்கள் போராட்டம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசிக்கிறதா காவல்துறை? தவெக அரசை உலுக்கிய சீமானின் ஆக்ரோஷ கேள்வி!