அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் உதவி பேராசிரியர்களை கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருப்பது மிகப்பெரும் அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம், உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் முக்கியமானதாகும்.
இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 16 உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கடந்த 10 முதல் 17 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் ஆட்சிமன்றக் குழுவால் நியமிக்கப்பட்ட இந்த தற்காலிக ஆசிரியர்களில் 80 விழுக்காட்டினர் முனைவர் மற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் எனவும் தெரிவித்தார்.

தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் 6 மாத ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட இவர்களை 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது விதி என்றும் ஆனால், 10 முதல் 14 ஆண்டுகளாக இதே பணியில் தொடரும் இவர்களின் பணி ஒப்பந்தத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை முறித்துக் கொண்டு, புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களைப் போன்று கணக்குக் காட்டி, பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10,000...! ஜெ. பிறந்தநாளில் வாக்குறுதிகளை அள்ளிவீசிய EPS..!!
எந்த நீதிமன்ற தீர்ப்புகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் நடைமுறைப்படுத்தாமல் அலட்சியமாகவும், ஆணவமாகவும் நடந்து வருகிறது என்றும் உயர்கல்வி துறையும், தமிழக அரசும் இதனை கண்டும் காணாமல் இருக்கிறது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, 328 தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கும் பணி நீட்டிப்பு ஆணை வழங்குவதுடன் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதித்து, ஊதியத்தை உயர்த்தி பணிநிலைப்பு செய்திட வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!