பாமக விதிகளில் திருத்தம் செய்து ராமதாஸ் தரப்பில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமதாஸ் உருவாக்கப்பட்ட பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை தொடர்பாக கூறப்பட்டது. அன்புமணியின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ராமதாசுடன் இருப்பவர்கள் மற்றும் ராமதாஸ் பற்றியும் மிகவும் அவதூறாக அநாகரீகமாக மனதை புண்படுத்தும் செய்திகளை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
ராமதாஸ் தான் கட்சியின் தலைவர் என்றும் நிறுவனர் மற்றும் செயல் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. சமரச பேச்சுவார்த்தையை அன்புமணி ஏற்காமல் உதாசீனப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது. ராமதாஸின் அனுமதி பெறாமல் அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் என்று கூறப்பட்டது. பாமக, நிறுவனர் குறித்து நாள்தோறும் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

கட்சியை பிளவுபடுத்த அன்புமணி செயற்பட்டதாகவே கருதப்படுவதாகவும் அன்புமணி ராமதாஸை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் எனவும் கூறப்பட்டது. பாமகவின் தொலைக்காட்சியை திட்டமிட்டு அன்புமணி அபகரித்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பாமகவின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சியை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு அன்புமணி கைப்பற்றிக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து ராமதாசை அன்புமணி அவமதித்து விட்டதாகவும் பாமக தலைமை அலுவலகத்தை திட்டமிட்டு அன்புமணி வேறு இடத்திற்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவ்ளோதான் முடிச்சு விட்டாங்க! உறுப்பினர் அட்டையிலிருந்து அன்புமணி புகைப்படம் நீக்கம்… பாமகவில் சர்ச்சை
இதுபோல அன்புமணி மீது பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமகவின் தேர்தல் நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்க அன்புமணி தவறும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் நோட்டீஸுக்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
அன்புமணி மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் பத்தாம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அன்புமணி பதிலளிக்காவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிருப்தியில் ராமதாஸ்… அலட்டிக்காத அன்புமணி! ஒழுங்கு நடவடிக்கை அறிக்கை சமர்ப்பிப்பு