தமிழகத்தில் தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிலைக்காது என்றும், ஒருவேளை அப்படி நீடித்தால் மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ₹10 லட்சம் கோடியிலிருந்து ₹20 லட்சம் கோடியாக உயர்ந்து ஒட்டுமொத்த மக்களும் கடுமையான கடனாளிகளாக மாறும் பேராபத்து ஏற்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற அதிமுக நகரச் செயலாளர் ஜிம் சங்கர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அவர், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையுமே தவெக அரசு நிறைவேற்றவில்லை; மாறாக ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 100 நாட்களில் ₹28,000 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் வருவாய் செலவு மட்டுமே ₹25,000 கோடியாகும். நிதி மேலாண்மை என்ற பெயரில் வெற்று ஆலோசனைக் குழுக்களை அமைத்துவிட்டு, இன்னும் ஒரு லட்சம் கோடி வரை கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!

திரைப்படங்களில் காட்சிகள் வருவது போல் நாடகத்தனமாகத் தமிழ்நாடு சட்டமன்றம் நடத்தப்பட்டு வருகிறது; 10 மணி நேர சபை நிகழ்வுகளில் மக்கள் பிரச்சனைகளுக்காக இரண்டரை மணி நேரம் கூட ஒதுக்காமல் ஏழரை மணி நேரப் பொன்னான நேரத்தை வீணடித்து திசை திருப்புகின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசிய அவர், சர்க்கரை விலை கிலோ ₹75 வரை உயர்ந்துள்ளது; அரிசி கிலோவுக்கு ₹15 முதல் ₹20 வரை அதிகரித்துள்ளது. புளி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து ஏழை எளிய மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்துச் சட்டமன்றத்தில் உணவுத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது உருப்படியான எந்தப் பதிலும் இல்லை. மக்கள் பிரச்சனைகளை மூடிமறைத்து விட்டு ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறலை மறைக்கும் விதமாகவே சட்டமன்ற நேரலைகளில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரல்கள் மட்டுமே ஒருதலைப்பட்சமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன எனச் சாடினார்.
தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வாங்கும் விவகாரம் குறித்துப் பதிலளித்த அவர், காரைப் பயன்படுத்துவது என்பது தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் சொந்த விருப்பம்; நான் முதலமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது அரசு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தினேன், தற்போது எனக்குச் சொந்த கார் இருப்பதால் அரசு கார் தேவையில்லை எனத் தவிர்த்துவிட்டேன்.
அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் விருப்பப்படி முடிவெடுக்கச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து முடிவெடுத்த முதலமைச்சர் விஜயிடமும் திமுக தலைவரிடமும்தான் கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!