தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்படும் இந்திய மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அடிக்கடி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுகின்றனர். நடப்பாண்டு மட்டும், இதுவரை 17 முறை கைது சம்பவங்கள் நடந்துள்ளன, இதில் நூற்றுக்கணக்கான மீனவர்களும் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 76 கடிதங்கள் எழுதியுள்ளார். இருப்பினும், இந்திய அரசின் தூதரக முயற்சிகள் பலனளிக்கவில்லை என மீனவர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் அராஜகம்.. ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!!
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே சிறைபிடித்தனர். இவர்களுடன் அவர்கள் சென்ற ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்கள் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கச்சிமடம் அரசு மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மீனவர்கள், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு, மற்றும் கடற்கொள்ளையர் அச்சுறுத்தல்களும் மீனவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மீனவ சமூகம் மத்திய, மாநில அரசுகளிடம் உரிய பாதுகாப்பு மற்றும் நிரந்தர தீர்வு கோரி வருகிறது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் எம்.பி.க்களுக்காக பிரம்மாண்ட அப்பார்ட்மெண்ட்.. திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!