விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் என கூறப்படும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியில் “சின்னத்தம்பி பைரோடெக்ஸ்” என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேதிப்பொருட்களை கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் மீனம்பட்டி பகுதியை சேர்ந்த மாடசாமி (33) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வேதிப்பொருட்களை கலக்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து! ரூ.20 லட்சம் பட்டாசுகள் எரிந்து சாம்பல்! போலீஸ் விசாரணை!

இந்த நிலையில், விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி எம்.ஜெயலட்சுமிக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசார் ஆலை உரிமையாளர் என குறிப்பிடப்படும் ஜெயலட்சுமி, அவரது மகள் செல்வமாரி, மகன் முரளீஸ்வரன் மற்றும் ஆலை மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் மற்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டாசு ஆலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த மாடசாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்ததுடன், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள போலீஸ் நடவடிக்கை சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!