சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போராடும் தூய்மை பணியாளர்கள்.. செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆறு கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து சீமான் தனது ஆதரவை தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகரை சுத்தமாக்கும் தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பினார்.
எல்லாம் தனியார் மயம் எனில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் தேர்வு செய்வது ஏன் எனவும் கேட்டார்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குப்பையல்லும் பணி கூட தனியாரிடம் இருந்தால் அரசுக்கு என்ன வேலை இருக்கிறது என்றும் சீமான் சாடினார்.
இதையும் படிங்க: அவங்க சரியா தானே சொல்லிருக்காங்க.. கோபி சுதாகருக்கு வக்காலத்து வாங்கும் சீமான்..!!