ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இறையாண்மை மிக்க ஈரான் நாட்டின் மீது, நோன்பு காலம் என்றும் பாராமல் அநியாயப் போரைத் தொடுத்த அமெரிக்க - இஸ்ரேல் நாடுகள், தற்போது போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து வருவது வெட்கக்கேடானது என்றும் வல்லாதிக்க நாடுகளின் அதிகாரப் பசிக்காகத் தொடங்கப்பட்ட இந்த அநியாயப் போர், ஆதரவளித்த வளைகுடா நாடுகளை நேரடியாகவும், போரோடு தொடர்பில்லாத உலகின் ஏனைய நாடுகளை மறைமுகமாகவும் பாதிக்கத் தொடங்கியுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இக்கொடும் போரினால் ஒவ்வொரு நாளும் கேட்கும் மக்களின் மரண ஓலம் மிகுந்த துயரத்தைத் தருகிறது எனவும் போரினால் பாதிக்கப்படும் இருநாட்டு மக்களும் உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வால் தவித்துவரும் காட்சிகள் மிகுந்த வேதனைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லாஹ் கொமைனியை அநியாயமாக கொன்று, அந்நாட்டின் மீது திணித்த அநீதியான போரினை, இறையாண்மையைக் காக்கும் வலுவான எதிர்ப்புப்போராட்டத்தால், உலக நாடுகளின் மீதான போராக மாற்றியுள்ளது ஈரான் என்றும் ஈரான் முதுகில் விழும் ஒவ்வொரு அடியும் உலக நாடுகள் ஒவ்வொன்றின் மீதும் விழும் அடியாக மாறியுள்ளது எனவும் சீமான் கூறினார்.

வளைகுடா நாடுகளின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாக முடங்கி, ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டாலர் வர்த்தகம் நட்டமாகி, அந்நாடுகளின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது., போரினை கண்டிக்காது அமைதி காத்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இப்போது எரிபொருள் பற்றாக்குறையால் பெரும் இன்னலுக்கு ஆளாகும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குற்ற சமூகமாக மாறிவிட்டோம்... யாருக்கும் பாதுகாப்பில்ல... சீமான் ஆதங்கம்..!!
கண்முன்னே நடக்கும் அநீதியைக் கண்டு, இதுவரை இருந்ததுபோல் இனி உலக நாடுகள் கண்டும் காணாமல் இருந்திட முடியாது என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது என்று கூடிய சீமான், அத்தகைய ஒரு பாடத்தை ஈரான் பெருந்தேசம் இப்போரின் மூலம் உலகிற்கு புகட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இனியேனும் உலக நாடுகள் தங்கள் தவறை உணர்ந்து ஈரான் மீதான அநீதியான போரினை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றும் உடனடியாக அமெரிக்க - இஸ்ரேல் நாடுகளிடம் ஈரான் மீதான போரினைக் கைவிட ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, உணவகங்கள் முடக்கம் உள்ளிட்ட அனைத்து சவால்களையும் சமாளிப்பதற்கு நியாயத்தின் பக்கம் நின்று அமைதிக்கான முன்முயற்சியை எடுப்பது ஒன்றே ஒற்றைத் தீர்வு என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்தது ஏன்? எதற்காக இபிஎஸ் உடன் கைகோர்த்தேன்? காளியம்மாள் பரபரப்பு பேட்டி..!!