திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனதுக்குரியது என்றும் அதிலும் குற்றத்தை தடுத்து மக்களை காக்க வேண்டிய காவலர்களே அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் என்றும் சீமான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக்குற்றங்களுக்கும், போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தாது, மலிவு விலையில் மது விற்கும் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான் அடிப்படை காரணம் என சாடிய அவர், 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நிகழ்ந்தேறுகிறது என்றும் இத்தனை சமூகப்பேரவலங்களும் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஆட்சியை, நல்லாட்சி, பொற்கால ஆட்சி, சாதனை ஆட்சி, யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்பதுதான் கொடுமையின் உச்சம் எனவும் கூறினார்.

போதைப்பொருட்களை ஒழித்து சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டிய காவல்துறை ஆளும் கட்சியின் அதிகாரக் கண்ணசைவுக்குச் சேவை செய்யும் ஏவல்துறையாகச் செயல்பட்டு எதிர்க்கட்சியினரை, அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை, சமூக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு புனைந்து சிறைப்படுத்துவதையே முழு மூச்சாக செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா e என்றும் இதுதான் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியதா ஆட்சியா என்ற கேள்வி எழுவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தி.மலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு! ஆட்டோ ஓட்டுநர்களால் ட்ராபிக்கில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள்...
திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு விரைந்து நீதி விசாரணை முடித்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: போலீஸ் வளையத்தில் விஜயின் வீடு... ரோட்ல நடக்க கூட கூடாதாம்!