திமுக கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எல். கே.சுதீஷ் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது போது உடன் இருந்தனர். திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு இது நடந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் தேமுதிக கட்சியை வரவேற்றார். திமுக கூட்டணி கட்சிகள் தேமுதிக இணைவுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளன.

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்திருப்பதை வரவேற்பதாகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொளுத்திப்போட்ட மாணிக்கம் தாகூர்..! கூட்டணிக்குள் புகைச்சல்.. கார்கேவிடம் முறையிட போவதாக செல்வப் பெருந்தகை தடாலடி..!
சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தும் நோக்கில் உருவான இந்த கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும் என்றும் கூறினார். மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளமான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை சீண்டும் மாணிக்கம் தாகூர்... அவசரகதியில் டெல்லிக்குச் செல்லும் செல்வப் பெருந்தகை..!