ஆந்திரா மாநிலம், காகிநாடா அருகில் உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சூரிய ஸ்ரீ என்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலைகள், கிடங்குகளிலும் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவதும், அதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகியுள்ளது என்றும் இவ்வாறான வெடி விபத்துகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

பட்டாசு ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது என்றும் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லாத மாநிலமாக உருவாக்கிட ஆந்திரா அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய கோர விபத்துகள் ஏற்பட காரணமாகிறது என விளக்கினார்.
இதையும் படிங்க: நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!
தமிழ்நாட்டில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே, வெயில் வாட்டி வதைப்பதாகவும், எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ஆலை, பெட்ரோல், டீசல் பங்குகள், கேஸ் பங்குகள் ஆகியவை பாதுகாப்பாகவும் முறையாக இயங்குகிறதா எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: மீனவர்களை தண்டிக்கும் மத்திய அரசு..! அவ்ளோ அலட்சியம்... செல்வப் பெருந்தகை தாக்கு..!!