கோடை வெயில் நீடித்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருவதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் திட்டமிட்டப்படி ஜூன் 2 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தார். பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நகரங்களில் வசிக்கும் பிள்ளைகள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கும், வெளியூருக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்ற குழந்தைகளும் பெற்றோர்களும் சொந்த ஊர் கிளம்பி கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏற்கனவே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்கள் வழங்கப்பட்டுவிட்டன. பள்ளிகளும் புதிய கல்வி ஆண்டுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. பள்ளிக் கல்வித்துறை மட்டுமல்லாமல் போக்குவரத்துத் துறையும் பள்ளிகள் திறப்புக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி சீட் விவகாரம்... எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு!!

போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. பொதுவாக கல்வி ஆண்டு தொடங்கி சில நாட்கள் கழித்துதான் மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கும் நடைமுறை தொடங்கும். அதுவரை மாணவர்கள் கட்டண அடிப்படையில் தான் பேருந்துகளில் பள்ளிக்கு செல்வார்கள். இந்தமுறை அந்தக் குறையை போக்கும் வகையில் அரசு மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்களுக்கு ஒரு பஸ் பாஸ் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸ் அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தாலே மாணவர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். இல்லையென்றால் மாணவர்கள் தங்களின் பள்ளி சீருடையுடனே கூட பள்ளிகளுக்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மாணவர்களை மற்றும் பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மகப்பேறு விடுமுறையில் முக்கிய மாற்றம்... அரசின் அறிவிப்பால் குஷி ஆன பெண் அரசு ஊழியர்கள்!!