லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நீண்ட நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 27) காலை 11.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இதையடுத்து அவர் தனது சொந்த மாநிலமான லடாக் நோக்கி புறப்பட உள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து 26 நாட்கள் உணவு அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றார்.

மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து லடாக் புறப்படும் முன், நாட்டின் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் சென்று அஞ்சலி செலுத்த சோனம் வாங்சுக் திட்டமிட்டுள்ளதாக அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!
சோனம் வாங்சுக் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. பல்வேறு சமூக அமைப்புகள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். உடல்நலக் குறைவு ஏற்பட்ட போதிலும் தனது கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்த அவர், தற்போது சிகிச்சை முடிந்து லடாக் திரும்புவதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து வெளியேறும் சோனம் வாங்சுக், ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தனது சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்! ஆனாலும் டெல்லி நீட் போராட்டம் தொடரும்! CPJ அபிஜித் தீப்கே உறுதி!