மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி பரக்கத் தெருவை சேர்ந்தவர் முகமது காசிம் மகன் முபின் அலி (14). எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து ஒன்பதாம் வகுப்பு செல்ல உள்ளார். இந்நிலையில் மாணவன் முபின்அலி கடந்த 31ஆம் தேதி மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது இனவகை தெரியாத விஷப்பூச்சி காலில் கடித்துள்ளது. வீட்டில் ஏதோ பூச்சி கடித்ததாக கூறிய படியே, மாணவன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பெற்றோர்கள் முபின் அலியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் நேற்று மாலை உயிரிழந்தார். மாணவன் உடல் பிரேத பரிசொதனை செய்யப்பட்ட நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் விஷப்பூச்சி கடித்த முபினுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் காலதாமதப்படுத்தியதால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், எஸ்டிபிஐ கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: உதகை மருத்துவமனைக்கு திடீர் விசிட்.. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்..!

3 முறை பரிசோதனை செய்து ஒன்றும் இல்லை என்று மருத்துவர்கள் சொன்ன நிலையில் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றியதாகவும், மறுநாள் மாணவன் உடல் வீங்கியதை தொடர்ந்து கால தாமதமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்ததாக மாணவனின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.

உயிரிழப்பிற்கு உரிய நீதி கேட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மயிலாடுதுறை அரசு மருத்தவமனையை கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை நிர்வாகத்தால் மாணவன் உயிரிழந்ததாக வேதனை தெரிவித்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல் போராட்டம் நீடித்து வருவதால் மயிலாடுதுறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING பொள்ளாச்சி அருகே பயங்கரம்... கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை...!