தைப்பூசத் திருநாளை முன்னிட்டு திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் உடனுறை கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த மேனாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய பட்ஜெட் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடல்நிலை குறித்துப் பத்திரிகையாளர்களிடம் விரிவாகப் பேசினார்.

இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் அல்ல, மாறாகச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாகப் பெண்களுக்குப் பெரும் ஏற்றம் கொடுக்கும் பட்ஜெட்டாகும். சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரிதும் உதவும் என்றார். உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கான 17 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும். மேலும், மருத்துவச் சுற்றுலா மற்றும் மருத்துவப் பயண வளர்ச்சிக்கானத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார். தென்னை சாகுபடி, முந்திரிப் பயிர் மேம்பாடு மற்றும் அதிக அளவிலானப் பாசன வசதிகள் எனத் தமிழ்நாட்டிற்குப் பல்வேறு நன்மைகள் இந்த பட்ஜெட்டில் கிடைத்துள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) மேம்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்! 140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!
தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் சாதனைப் படைத்துள்ளார். தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியதற்காகவும், இத்தகையச் சிறந்த பட்ஜெட்டை வழங்கியதற்காகவும் பிரதமருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கடந்த ஜனவரி 30 அன்று பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து, தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று எச்.ராஜா அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தது வரவேற்கத்தக்கது என்று தமிழிசை தெரிவித்தார். எச்.ராஜா அவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடைந்து தனது சுறுசுறுப்பான அரசியல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
சிலர் இந்த பட்ஜெட்டை 'டப்பா என்ஜின், டப்பா என்ஜின்' என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனால், இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சியை சூப்பர் பாஸ்ட் என்ஜின் வேகத்தில் கொண்டு செல்லும் வலிமை கொண்டது என்பதை அவர்கள் உணரவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இது தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், இது உண்மையில் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்றம் கொடுக்கும் பட்ஜெட் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026-27 மத்திய பட்ஜெட்: தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!! தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..??