தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் ஆகம விதைகளைப் பின்பற்றும் கோயில்கள் மற்றும் ஆகம விதைகளைப் பின்பற்றாத கோயில்களைக் கண்டறிந்து வகைப்படுத்தும் பணியை முடித்துப் பட்டியலை வெளியிடத் தமிழக அரசுக்கு மேலும் 5 மாத காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், தமிழ்நாட்டில் ஆகம விதைகளைப் பின்பற்றும் கோயில்கள் மற்றும் பின்பற்றாத கோயில்களை வகைப்படுத்திப் பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் தமிழக அரசு இதுவரை அந்தப் பட்டியலை வெளியிடவில்லை; எனவே உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. கருணாகரன், மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து வகைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே, இப் பணியை முழுமையாக முடித்துப் பட்டியலைத் தயாரித்து வெளியிட 8 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! மக்களவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!
தமிழக அரசு 8 மாத காலம் கேட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், 5 மாதங்களுக்குள் ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்கள் மற்றும் பின்பற்றாத கோயில்களைப் பிரித்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, இப் பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் 5 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!