தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையின் மிக முக்கியக் கூட்டம் நாளை சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட் குறித்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

நாளை மதியம் 12 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆண்டைக் கருத்தில் கொண்டுப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்குப் பதிலாகச் சில மாதங்களுக்கானச் செலவினங்களை மேற்கொள்ளும் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடுகளை அமைச்சரவை நாளை இறுதி செய்யும். தமிழக அரசின் மிக முக்கியமானத் திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ், உதவித் தொகையை உயர்த்துவது அல்லது பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகலாம். தமிழகத்தின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில், புதிதாகத் தொடங்கப்படவுள்ளத் தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்க அமைச்சரவை முடிவு செய்யவுள்ளது.
இதையும் படிங்க: கல்வியும் மருத்துவமுமே நமது இருகண்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவு!
அரசு ஊழியர்களுக்கானப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பானச் சிறு அறிவிப்புகள் அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகச் செயல்படுத்தப்பட வேண்டியத் திட்டங்கள் பட்டியலிடப்படும். குறிப்பாக, மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக நிலவும் அதிருப்தியைத் தணிக்கும் வகையில், மாநில அரசின் சார்பில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்! விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!