சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த பின் புதிய மின்மாற்றியில் மின்இணைப்பு தர வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளை திருப்பி அனுப்ப முயன்ற தவெக நிர்வாகிகளை விரட்டி அடித்த பொதுமக்களால் கூடுவாஞ்சேரியில் பரபரப்பு
குறைந்த மின் அழுத்தம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு - புதிய மின்மாற்றி அமைத்து 50-நாட்களை கடந்தும் இணைப்பு தராத நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு ஊராட்சிக்குட்பட்ட மூலக்கழனி பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் தெரு, வாசுதேவபுரம், ஐயப்பன் நகர், மருது சாமி தெரு, விமல் அவென்யூ, வைஷ்ணவி நகர், கோபால் நகர், கணேஷா கார்டன் உள்ளிட்ட குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!
இந்த பகுதிகளில் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று முறை மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில் கூடுதலாக மின் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி புதிய மின்மாற்றி (Transformer) மின்வாரிய அதிகாரிகளால் வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிக்கு மின் இணைப்பு கொடுக்கப்படாததால் குறைந்த மின் அழுத்தத்தின் காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்றும் குறைந்த மின் அழுத்தத்தின் காரணமாக மதியம் மூன்று மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் இருவர், புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் இணைப்பு தர வேண்டாம் எனவும், நாளை சட்டமன்ற உறுப்பினர் மின்மாற்றியை திறந்து வைத்த பின்னர் மின்இணைப்பு தருமாறு கூறி மின்வாரிய ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.
சுமார் ஆறு மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டால் தவித்து வந்த பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாளை சட்டமன்ற உறுப்பினர் வந்து திறந்து வைக்கட்டும், ஆனால் இன்று இரவு மின்மாற்றியில் மின் இணைப்பு தர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் இருவரை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனை அடுத்து பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய மின் மாற்றிகள் மின் இணைப்பு வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் தவித்து வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையும் படிங்க: காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!