சென்னை திருவொற்றியூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த 16 வயது மாணவர் தனுஷ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த தனுஷ், வசந்த நகரைச் சேர்ந்தவர். வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிலையம் பகுதியில் அவருடைய உடல் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் மாலை 4.45 மணியளவில் கடந்து சென்றவர்கள் அவரைப் பார்த்து போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் உயிருடன் இருப்பதாக நினைத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், பத்துக்கும் மேற்பட்ட 11ஆம் வகுப்பு மாணவர்கள் கொண்ட கும்பல் தனுஷைப் பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச் சென்று அருகிலுள்ள இடத்தில் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு அவர் மயங்கி விழுந்த நிலையில் குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். சில தகவல்களில் முன்னாள் மாணவர்கள் தொடர்புடையவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திருவொற்றியூர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

அவரது அறிக்கையில், சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால் அரசுப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவர் தனுஷ் 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கோவையில் போதைக் கும்பலைத் தட்டிக்கேட்டதற்காகக் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சில தினங்களுக்குள்ளேயே சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்குத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்குத் தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ விற்பதையோ அம்பலப்படுத்தினால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நிர்வாகத்திறனற்ற இந்த அரசைக் கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்குக் காரணம் என்றும், குறிப்பாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பது வெட்கக்கேடு என்றும் அவர் விமர்சித்துள்ளார். மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மின் வயரை மிதித்து ஆறாம் வகுப்பு மாணவன் பலி... போராட்டத்தில் குதித்த உறவினர்கள்... ஈரோட்டில் பரபரப்பு..!!