தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மாற்றாக, அதே வளாகத்தில் 'பசுமை தாமிர உற்பத்தி ஆலை' அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
காற்று, நீர், நிலம் மாசு ஏற்படுத்துவதாகக் கூறி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு, 2018 ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2020 ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், பசுமை தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி தமிழக தொழில்துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்க்ளுக்கு, கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை ஆறு மனுக்கள் அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்..!! தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!
இந்த மனுக்களைப் பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக அரசுத்துறை செயலாளர்களுக்கு மனு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதே தவிர, முறையாகச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்க வில்லை எனவும் அரசுத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலிருந்து அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு நிலுவையில் இருப்பதாக, மனுதாரர் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிலுவையில் உள்ள வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்
இதையும் படிங்க: செலவு ₹4,000 கோடி! ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் இல்லை - தமிழக அரசு விளக்கம்!