கேரளாவில் மலைகள் இல்லையா என்றும் தமிழ்நாட்டின் கனிமவளத்தை அழிக்கத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.
குறிப்பாக, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டின் போது, கேரள முதலமைச்சர் திரு.சதீசன், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் கேரளாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, கேரளாவை இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாக கேரள முதலமைச்சர் அலுவலகமே தெரிவித்துள்ளது. இது உண்மையா என்று கேட்டார்.

கேரளாவில் மலைகள் இல்லையா? அங்கு கல், பாறை, கட்டுமானத் தேவைக்கான கனிம வளங்கள் இல்லையா? கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளையும் பாறைகளையும் ஏன் அழிக்க வேண்டும்? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார். கேரளமாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும், ஆந்திரமாக இருந்தாலும், எந்த மாநிலத்தின் கட்டுமானத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையை அழிப்பதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசே... தமிழர்களை காப்பாற்று..!! வெளிநாட்டில் சிக்கியவர்களை மிக்க வேல்முருகன் வலியுறுத்தல்..!!
எனவே, கேரளாவுக்கு தனிப்பட்ட விலக்கு அளிப்பது குறித்த பரிசீலனையை, தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும். தமிழ்நாட்டின் உள்நாட்டுத் தேவையை முதலில் முழுமையாகக் கணக்கில் கொண்டு, இயற்கை வளத்தின் இருப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளை உறுதி செய்த பின்னரே கனிமவளப் பயன்பாடு தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் எனவும்
வெளிமாநிலங்களுக்கு கனிமவளங்களை எடுத்துச் செல்வதில் விதிவிலக்குகளுக்கு இடமளிக்காமல், சட்டவிரோதக் குவாரிகள், அதிகப்படியான அகழ்வுகள் மற்றும் கனிமவளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!