2025 ஐபிஎல் சீசனில் இன்று முதல் குவாலிபயர் போட்டியில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி குவாலிஃபையர் 2வில் விளையாட மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். சந்திகாரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யாவும், பிராப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர். பிரியான்ஸ் ஆர்யா 7 ரன்களில் ஆட்டமிழக்க பிராப்சிம்ரன் சிங் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களில் ஆட்டம் இழக்க, அதிரடி வீரர் ஜோஸ் இங்கிலீஷ் 4 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான நேகல் வதேரா 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி முதல் பவர் பிளே முடிவில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து களத்திற்கு வந்த மார்க்க ஸ்டோனிஸ் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியை நினைத்து ஒரு மூலையில் அமர்ந்து அழுகிறேன்... ரவிச்சந்திரன் அஷ்வின் உருக்கம்!!

17 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதேபோன்று இம்பேக்ட் வீரராக களமிறங்கிய முசிர் கான் டக் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷசாங் சிங் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா உமர் சாய் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க ஹர்பிரித் பிரார் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்தது.

102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மயங்க் அகர்வால் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் பில் சால்ட் மிக சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்ட்ரி, 3 சிக்சர்கள் அட்ங்கும். ரஜத் பட்டிதார் 15 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.
இதையும் படிங்க: LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!