இந்தியாவின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட் குழுமம், வாடிக்கையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் எளிதாக்கும் வகையில் ‘ப்ளிப்கார்ட் பே லேட்டர்’ என்ற புதிய கடன் சேவையை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. பேயு ஃபைனான்ஸ் (PayU Finance) உடனான கூட்டாண்மையில் அறிமுகமான இந்த சேவை, ப்ளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் ப்ளிப்கார்ட் மினிட்ஸ் தளங்களில் உடனடியாகக் கிடைக்கிறது.
இந்த சேவையின் மூலம் நுகர்வோர் பொருட்களை உடனே வாங்கி, பின்னர் தங்களுக்கு வசதியான முறையில் தொகையைத் திருப்பிச் செலுத்தலாம். மூன்று முக்கிய விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவது ‘பே லேட்டர்’ – அன்றாடப் பொருட்களுக்கு 30 நாட்கள் வரை அவகாசம். இரண்டாவது ‘பே இன் 3’ – மொத்தத் தொகையை மூன்று சமமான தவணைகளாகப் பிரித்துச் செலுத்தும் வசதி. மூன்றாவது EMI திட்டம் – ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபகரணங்கள், ஃபர்னிச்சர் போன்ற உயர் மதிப்புப் பொருட்களுக்கு 3 முதல் 12 மாதங்கள் வரை தவணை. ஃபேஷன், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கும் இந்த EMI வசதி கிடைக்கும்.
ப்ளிப்கார்ட் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்கும் அதேவேளையில், பேயு ஃபைனான்ஸ் உரிமம் பெற்ற கடன் வழங்குநராகச் செயல்படுகிறது. பரிவர்த்தனை வரலாறு, வாங்குதல் பழக்கம் மற்றும் தளத் தரவுகளைப் பயன்படுத்தி விரைவான கடன் அனுமதி வழங்கப்படுகிறது. நிறுவனம் மேலும் பல கடன் கூட்டாளர்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: 72 மணி நேரத்தில் 2.71 லட்சம் முன்பதிவா..!! சக்கைபோடு போடும் சாம்சங் கேலக்ஸி Z சீரிஸ்..!!

ஏற்கனவே உள்ள யூபிஐ, டிஜிட்டல் வாலெட், கிரெடிட்-டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங், கேஷ் ஆன் டெலிவரி மற்றும் கிஃப்ட் கார்டுகள் ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் புதிய சேவை செயல்படும். இளம் வாடிக்கையாளர்கள் மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் விஷால் அகுஜா “மலிவுத்தன்மை இந்திய டிஜிட்டல் வர்த்தகத்தின் முக்கிய இயக்கி. இது வெறும் பணம் செலுத்தும் அம்சம் அல்ல; டிஜிட்டல் பொருளாதாரத்தில் யார் பங்கேற்கலாம் என்பதை மாற்றும் படி” எனத் தெரிவித்தார். பேயு ஃபைனான்ஸ் தலைமை நிர்வாகி தீபக் மெந்திராட்டா நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இந்த அறிமுகம் இந்திய ஈ-காமர்ஸ் துறையில் போட்டியை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஆக. 6-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 17 5ஜி.. 8000mAh பேட்டரியுடன் புதிய வரவு!!