பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பி இருந்தார். இந்த நிலையில் முதல்வருக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். சமக்ரா சிக்ஷா திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன் என்றும் நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள் எனவும் கேட்டுள்ளார்.
Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார் என்றும் உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை என்று கேட்டார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்றும் உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள் எனவும் கேட்டார்.
இதையும் படிங்க: ஜி ராம்ஜி... தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக..! 100 நாள் வேலை திட்டம் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின்..!

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள் என்று கூறிய அண்ணாமலை, மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது என்று கூறினார்.
AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை., மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே என சாடினார். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா என்றும் குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா என்றும் 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை எனவும் சாடியுள்ளார்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா என்றும் கீழடி ஆய்வறிக்கை ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு என்றும் சரமாரி கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை, இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.3.50 கோடியில் மெட்ரோ பூங்கா, விளையாட்டு மைதானம்..! திறந்து வைத்து பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி..!