சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் இரண்டாவது பிரதான சாலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. நேற்று மாலை சிலையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒரு தரப்பைச் சேர்ந்த நபர் மற்றொரு தரப்பினருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், இரு தரப்பினரும் பிரித்து அனுப்பப்பட்டனர். பின்னர், நள்ளிரவில் அதே வீட்டிற்கு மீண்டும் வந்து இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், சீனிவாசன் என்ற நபர் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
குறிப்பாக, ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜ கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேனியில் பயங்கரம்... பெண்ணை கொன்று வீட்டிற்குள் சடலத்துடன் 3 நாட்கள் பரோட்டா மாஸ்டர் செய்த காரியம்..!
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், விநாயகர் சிலை ஊர்வலத்தை தங்கள் பகுதி முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று கேட்டதாகவும், இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தகராறு முற்றியதாகவும் கூறப்படுகிறது. இதில் அடிதடி சண்டையும் நடைபெற்றுள்ளது.
இதில் ஆனந்த் என்பவர் சீனிவாசனின் நெஞ்சில் குத்தியபோது, அவர் சுயநினைவின்றி கீழே விழுந்துள்ளார். உடனடியாக சீனிவாசனை மீட்டு கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ராமாபுரம் போலீசார் கொலைப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 6 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொலை செய்த நபர் யார் என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாகவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!