மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளில் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (13.08.2026) விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 12.08.2026 அன்று தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தற்போதைய 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையே தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலான இடப்பகிர்வு முறையே தொடர வேண்டும். அதாவது, தமிழ்நாடு உட்படக் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கப்படவோ மாற்றியமைக்கப்படவோ கூடாது.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!
மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு இடையேயான தற்போதைய விகிதம் (2.2 : 1) தொடர்ந்து பேணப்பட வேண்டும். தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையிலேயே, எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத (1/3 பங்கு) இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைப்பதை ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு, அரசியலமைப்பின் 81(2)(a) சட்டப்பிரிவின் படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 1967-இல் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்ட வரலாற்றுப் பிழையை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, சிறப்பான பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் பொதுநலத் திட்டங்களை முன்னெடுத்த தென்னக மாநிலங்களுக்குத் தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது பேரநீதியாக அமையும் எனத் தனது கடிதத்தில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் முக்கியத்துவத்தைப் பரிசீலித்து, கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு உடனடியாகக் கொண்டுவர வேண்டும் எனப் பிரதமரைக் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!