மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR-CIMAP) மூத்த விஞ்ஞானி டாக்டர் ஆகாங்க்ஷா சிங், ஒரே ஆண்டில் நாட்டின் 3 முக்கிய அறிவியல் விருதுகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 2026 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற 'நாசி' (NASI) இளம் விஞ்ஞானி விருதிற்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அரிய சாதனை முழுமை பெற்றுள்ளது.
மத்திய மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்கள் நிறுவனத்தில் (CSIR-CIMAP) 'சயின்டிஸ்ட்-டி' ஆகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆகாங்க்ஷா சிங், தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். இவர் தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு இடையிலான தொடர்புகள், இயற்கை வழிப் பயிர்ப் பாதுகாப்பு, பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத நோய் மேலாண்மை முறைகள் குறித்துத் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை நுண்ணுயிரிகள் மூலம் பயிர்களைப் பாதுகாப்பதே இவரது முக்கிய ஆராய்ச்சியாகும்.

நடப்பு 2026 ஆம் ஆண்டில், இந்திய தேசிய இளம் அறிவியல் அகாடமி (INYAS) உறுப்பினராகத் தேர்வான இவர், தொடர்ந்து இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் (INSA) இளம் அமைப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தேசிய அறிவியல் அகாடமியின் (NASI) இளம் விஞ்ஞானி விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டதன் மூலம், ஒரே ஆண்டில் 3 உயரிய தேசிய அங்கீகாரங்களைப் பெற்ற இளம் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: முந்தைய திமுக அரசைப் போல மோதல் போக்கு வேண்டாம்" - முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அறிவுரை!
வருகின்ற டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் அகாடமியின் 96-வது ஆண்டு விழாவில் இவருக்கு இந்த விருது முறைப்படி வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இந்திய விவசாயத் துறையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த ஆராய்ச்சிகளிலும் இவரது பங்களிப்பு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "காவி கொடி வேண்டாம், தேசியக் கொடி தாருங்கள்" - பாஜக நிர்வாகிகளைக் கடிந்துகொண்ட அமித் ஷா!