சென்னை: சட்டசபைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த தி.மு.க., அதற்கான காரணங்களை கண்டறிய 36 பேர் கொண்ட குழுக்களை அமைத்து தொகுதி வாரியாக கள ஆய்வை தொடங்கியுள்ளது. ஆனால், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே “இந்த ஆய்வால் என்ன பலன்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
“கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?” என்கின்றனர் சிலர். மாவட்டச் செயலாளர்கள் (மா.செ.) குறுநில மன்னர்களாக செயல்படுவதாகவும், இரண்டாம் கட்டத் தலைவர்களை வளரவிடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறிவாலயத்தில் உள்ள சிலருக்கும் மா.செ.க்களுக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக, ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் குறைகள் உடனடியாக மா.செ.க்களுக்கு தெரிந்துவிடும் என தொண்டர்கள் அஞ்சுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் அலை காரணமாக 108 தொகுதிகளில் தி.மு.க. தோற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்க்கு ஈர்ப்பா? அல்லது தி.மு.க. மீது மக்கள் வெறுப்பா? என்பதை கண்டறிய ஸ்டாலின் தலைமை இந்த ஆய்வுக் குழுக்களை நியமித்துள்ளது.
இதையும் படிங்க: திமுக கள ஆய்வு கூட்டத்தில் பெண் நிர்வாகியிடம் சில்மிஷம்?! புகார் தெரிவிக்க முடியாமல் புலம்பும் நிர்வாகிகள்!

ஆனால், மா.செ.க்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், தங்களுக்கு போட்டியாக வளரக் கூடியவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது உழைத்தவர்களுக்கு 5 ஆண்டு ஆட்சியில் பலன் கிடைக்கவில்லை என்கின்றனர். அமைச்சர்கள் மற்றும் மா.செ.க்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே லாபம் பார்த்ததாகவும், டெண்டர் பணிகள் பழைய ஒப்பந்தக்காரர்களுக்கே வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைக்கு புகார் அனுப்பினாலும், அது மா.செ.க்களிடம் சென்று விடுவதால் உண்மையான கருத்துகளை தைரியமாக தெரிவிக்க முடியவில்லை என தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இம்முறையாவது தலைமை உண்மையான நடவடிக்கை எடுத்து மா.செ.க்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே கட்சி மீண்டு வரும் என அவர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: இப்பிடி அதிமுகவுக்கு துணை போறீங்களே? நியாயமா? மு.க.ஸ்டாலின்.. உதயநிதி மீது திமுக தொண்டர்கள் அதிருப்தி!