முதலமைச்சர் பிறந்தநாள் கூட்டத்தில் திமுக பேச்சாளர் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்திடும் வகையில் பேசியதால் கடும் அதிருப்தி. கருணை தொகை வழங்கிட மக்கள் என்ன நொண்டி, முடம் எனவும், தேர்தலில் வெற்றி பெற முடியாத எதிர்கட்சிகளை நொண்டி முடம், குருடன் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததால் சர்ச்சை.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அண்மையில் ஆளுநரையும், நடிகை குஷ்புவையும் அவதூறாக பேசிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இந்த பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
தனக்கு ஆயுள் தண்டனை வழங்கினாலும், கை, கால் விளங்காமல் போனாலும், நாக்கு சுழலும் வரையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுவான் என்றார். தற்போது நடைபெறும் ஆட்சியில் ஆண்களுக்கு ஏதும் செய்யப்படவில்லை என்றும், பெண்களுக்கு அனைத்து திட்டங்களையும் செய்து வருவதாக கூறினார். பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய காலம் எனவும், அவசியத்தை உணர்ந்து மகளிர் பயன்பெறும் வகையில் விடியல் பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம்... வெயில், மழை பாக்காம உழைப்பாங்க... மேயர் பிரியா பேச்சு..!!
அழகாக இருப்பதால் கணவன் சந்தேக கண்ணோட்டத்தோடு எங்கும் அனுப்பாமல், வேலைக்கு கூட வெளியே செல்லாத பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக கூறினார். 5பைசா கொடுக்க வக்கில்லாதவன், குழந்தை பெற்றெடுக்க முடியாதவன், முண்டி, முடம், குருடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தேர்தல் வருவதால் மகளிர் உரிமை தொகையை நிறுத்தி வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும், அதனை உணர்ந்த முதலமைச்சர் பெண்கள் பயன்பெற்றிடும் வகையில் 5000ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக கூறினார்.
பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கூட கொடுக்க முடியாது என கூறிய எடப்பாடி பழனிசாமி, தனக்கு வாக்களித்தால் குடும்பத்திற்கு 10000ரூபாய் தருவதாக கூறி வருகிறார் எனவும், திமுக உரிமைத்தொகை வழங்கும் நிலையில் எடப்பாடி கருணைத்தொகை கொடுப்பதாக சாடினார். அவர் யார் எலிசபெத் மகாராணி பேரனா, நொண்டி, முடம், சக்கர நாற்காலியில் வருகிறோமா, பிச்சைக்காரனா கருணை காட்ட என்றார். உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி வருவதாக கூறினார்.
தொழில் முதலீடுகளை ஏற்று வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக கூறினார். கொரோனா காலகட்டத்தில் அனைவரும் தனித்திருந்த நிலையில், திமுக மட்டுமே ஒன்றிணைவோம் வா என கூறி மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் நிறைவேற்றி தந்ததாகவும், தனது உயிரையும் கொடுத்து மக்களுக்கு சேவை செய்பவனை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்றார். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு அதிமுக தேவையான நிதியுதவி செய்யவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமி சசிகலா காலை நக்கியது போல, அரசு கஜானாவை நக்கி விட்டு சென்று விட்டார்.
தமிழ்நாட்டின் குடும்பங்களுக்கு கருவறை முதல் கல்லறை வரையில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் திட்டங்களை பட்டியலிட்டு எடுத்துரைத்தார். நொண்டி, டுபுக்கு என அழைத்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்ததாகவும், பொட்டை என அழைத்தவர்களை திருநங்கை என பெயர் வைத்து நலவாரியம் அமைத்து கொடுத்தவர் தலைவர் கலைஞர் என்றார். பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் என அனைவரையும் நீதிபதியாக்கியவர், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கராக்கியது கலைஞர் எனவும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளாட்சியில் பிரதிநித்துவம் பெற்றிடும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் இயற்றியதாகவும், தந்தை செய்த திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும், இதனை வாரிசு அரசியல் என சிலர் விமர்சிப்பதாக கூறினார். மிசா சட்டத்தில் ஸ்டாலின் சிறை சென்ற போது, கரு உருவானதால் சிறை சென்றதால் அதனை கலைத்து விடுமாறு கூறிய நிலையில் அதனை மீறி பிறந்தவர் உதயநிதி என கூறினார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை... முதல்வர் முக்கிய ஆலோசனை..!!