நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் மறைந்த சாமியாத்தாள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப் படுவதாகவும் தகவல் வந்ததும், அதிமுக இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது என்று கூறியுள்ளார். மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளில் வெற்றி என முதல்வருக்கு பகல் கனவு.. லெப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி..!

பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது என கூறியுள்ள அவர், தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க பொம்மை முதலமைச்சர் முயல வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!