தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் சேட் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் மணிகண்டனை ஆலங்குளம் எஸ்.ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார், பனைத் தோப்புக்கு அழைத்துச் சென்று, மரத்தில் கட்டப்பட் டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா என சோதிக்க கட்டாயப்படுத்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எஸ்ஐ இசக்கிராஜா, மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களால் வெளியிடப்பட்ட சில அறிவியல் கட்டுரைகளில் கள்ளில் வைட்டமின்-ஏ, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மனுதாரர் வழக்கறிஞர் தரப்பில், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தயமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவற்றின் அளவை அதிகரிக்கிறது என்றும், இரைப்பை கோளாறுகள் மற்றும் குடல் புண்களைக் கட்டுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளில் சில ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன என்பதையும், அதை மற்ற மதுபானங்களுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்பதற்காக சில ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இருப்பினும் கள் இறக்கியதாக கூறி மனுதாரரின் மகனை தீவிரக் குற்றவாளியாக கருதி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி காயப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!
கள் ஒரு போதை தரும் பானம் என்பதால் பொது சுகாதாரத்தின் நலன் கருதி அதன் உற்பத்தி மற்றும் நுகர்வை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டுள்ளது.
அரசு தரப்பில், கள்ளின் போதைத்தன்மையை அதிகரிக்க குளோரல் ஹைட்ரேட் மற்றும் பிற கலப்படப் பொருட்கள் பெரும்பாலும் அதில் சேர்க்கப்படுகின்றன என்றும், மாநிலம் முழுவதும் பரவியுள்ள ஏராளமான பனை மரங்கள் மற்றும் கள் உற்பத்தியின் பரவலாக்கப்பட்ட தன்மையை கருத்தில் கொள்ளும்போது ஒவ்வொரு கள் இறக்கும் இடத்தையும் திறம்படக் கண்காணிப்பதும், கலப்படத்தைத் தடுப்பதில் நிர்வாக சிக்கல்கள் எழும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். மாநிலத்தின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் அடையாளத்தின் முக்கிய குறியீடாகவும் திகழ்கிறது. நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், பனை சார்ந்த வாழ்வாதாரங்களுடன் கள் பாரம்பரியமாகத் தொடர்புடையது என்பதையும், அதன் ஊட்டச்சத்து மற்றும் பிற நன்மை பயக்கும் பண்புகள் குறித்த கருத்துகளையும் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும் கள் ஒரு போதை தரும் மதுபானம் என்பதாலும், அதில் கலப்படம் செய்வதைத் தடுப்பதும் அதன் உற்பத்தியைக் கண்காணிப்பதிலும் நிர்வாக சிக்கல்கள் இருப்பதாக தடை விதித்ததை அரசு நியாயப்படுத்துகிறது.
அதே நேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்கிறது. இந்த விற்பனை அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது.
இது அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும் உள்ளது. உண்ளையில் புதிதாக இறக்கும் கள்ளில் இந்தியாவில் தயாரிக்கும் வெளிநாட்டு மதுபானங்களை விட குறைவான அளவிலேயே ஆல்கஹால் உள்ளது. மாநிலத்தில் கள் இறக்குவது மற்றும் விற்பனைக்கு ஏற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
ஒழுங்குபடுத்தப்பட்ட உரிம அமைப்புகளின் கீழ் பக்கத்து மாநிலங்களில் கள் விற்பனை அனுமதிக்கப்படுகிறது. மதுவிலக்கு குற்றங்களைக் கண்டறிவதிலும், சட்டவிரோத மதுபானங்களை கைப்பற்றுவதிலும், வாகனங்களை பறிமுதல் செய்வதிலும் அதிகாரிகள் வெற்றிகரமாக செயல்படுகின்றனர். மதுவிலக்குக் குற்றங்கள் விஷயத்தில் இத்தகைய விரிவான கண்காணிப்பு சாத்தியம் என்றால், கள்ளை ஒழுங்குபடுத்துவதற்கும் இதே போன்றதொரு வழிமுறையை ஆராயலாம்.
இந்த நடவடிக்கை பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு தீர்வு காண்பது மட்டுமல்லாமல், விவசாயிகள், பனை ஏறுபவர்கள் மற்றும் பனை சார்ந்த தொழில்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வை மேம்படுத்தும்.
இருப்பினும் கள் மீதான தடையைத் தொடரலாமா அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட உரிமக் கட்டமைப்பின் கீழ் விற்பனைக்கு அனுமதிக்கலாமா என்பதை முடிவெடுக்க வேண்டியது மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் கொள்கை முடிவு சார்ந்தது. இதனால் அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்.
இந்த வழக்கில் விவசாயி மீது துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறையினர் வரம்பு மீறிச் செயல்பட்டுள்ளனர். சார்பு ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால உள்ளூர் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. மனுதாரர் மகனுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச்சூடு... பாதுகாப்பு அதிகாரி உட்பட 3 பேர் பலி... இறுதியில் நடந்த விபரீதம்...!