தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2026-க்கு எதிராக நிறைவேற்றிய தனித்தீர்மானத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தேவையற்ற விளம்பர நாடகம் என்றும், வாக்கு வங்கி அரசியலுக்காக உருவாக்கப்பட்ட போலி பிம்பம் என்றும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், இந்தச் சட்டம் முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் 2010, 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதைய 2026 திருத்த மசோதாவும் அந்தத் தொடர்ச்சியின் ஒரு பகுதியே அன்றி, பாஜக அரசு புதிதாக உருவாக்கிய சட்டம் அல்ல. அனைத்து மதங்களைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் (என்ஜிஓக்கள்) வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதே இதன் நோக்கம்.
சிறுபான்மையினர் அமைப்புகளின் நிதியை முடக்குவதற்கான திட்டம் போல தமிழக அரசு சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது என்று அவர் குறிப்பிட்டார். மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கும்போது, என்ஜிஓக்கள் முறையாகப் பதிவுசெய்வது, விதிமுறைகளின்படி நிதி பெறுவது, வரவு-செலவு அறிக்கைகளை வெளியிடுவது போன்றவை மட்டுமே வலியுறுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சமூக நலனுக்காக வரும் வெளிநாட்டு நிதி சரியான நோக்கத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எஃப்சிஆர்ஏ-வின் அடிப்படைக் கொள்கை. 2010 சட்டத்தில் பதிவு ரத்து செய்யப்பட்டால் சொத்துக்கள் மாநில அரசு கட்டுப்பாட்டிற்குச் செல்லும் என்ற விதி இருந்தது. புதிய திருத்தத்தில், பதிவு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டால் அந்தச் சொத்துக்களும் பயன்படுத்தப்படாத நிதிகளும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது தொண்டு நிறுவனங்களுக்கு மேலும் பாதுகாப்பை அளிக்கிறது.
தேசப் பாதுகாப்பையும், உண்மையான சமூக சேவை அமைப்புகளின் பாதுகாப்பையும் ஒருசேர உறுதிசெய்யும் இந்த மசோதாவை கண்மூடித்தனமாக எதிர்க்கும் அணுகுமுறையை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக சட்டத்தின் உண்மையான நோக்கத்தைத் திரித்துக்காட்டுவது மக்களைத் தவறாக வழிநடத்தும் செயல் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "நவோதயா பள்ளிகளை தடுக்கும் முதல்வர் விஜய்"..! நயினார் நாகேந்திரன் கண்டனம்.!