மன்னார்குடி அருகே இரண்டு நபர்கள் இரவில் உடும்பு பிடிக்க புதரை தோண்டிய போது அடுத்தடுத்து 9 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது . வெண்கல சிலையா , ஐம்பொன் சிலையா என வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் , போலீசார் விசாரணை ..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பாமணி கிராமம் நரிக்குறவர் காலனி தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்கணேஷ் , சின்னதுரை ஆகியோர் இரவில் உடும்பு பிடிப்பதற்கு அந்த கிராமத்தில் உள்ள நாகநாத சுவாமி கோவில் பின்புறம் சென்றுள்ளனர். அப்போது உடும்பு ஒன்று புதற்குள் புகுந்துள்ளது.
இதனை அறிந்த சின்னதுரை, ஜெய்கணேஷ் ஆகியோர் இரும்பு பாறை கொண்டு புதரை தோண்டியுள்ளனர். அப்போது இரும்பு பொருட்களில் உரசியது போல வேகமாக சத்தம் கேட்டுள்ளது. இதனை அறிந்த ஜெய்கணேஷ் , சின்னதுரை இருவரும் புதரை தோண்டிய போது சாமி முகத்துடன் சிலை இருந்ததை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அதன் பிறகு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன் , மற்றும் வட்டாட்சியர் நக்கீரன் ஆகியோர் சாமி சிலைகள் இருந்ததை கண்டறிந்தனர்.
பின்னர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு புதர்களை தோண்டியபோது 3 அடி கொண்ட நடராஜர் சிலை , பெருமாள் ,விஷ்னு , அம்மன் சிலைகள் பீடம் உள்ளிட்ட அடுத்தடுத்து 9 சிலைகள் உள்ளிட்ட சாமி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன . இந்த சிலைகளை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது .
பின்னர் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பிறகு இது வெண்கல சிலையா , இல்லை ஐம்பொன் சிலைய என தெரியவரும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களே தப்பித் தவறிக்கூட அந்த பக்கம் போகாதீங்க... வைகை அணையில் மறைந்திருக்கும் பேராபத்து...!