துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2.40 கோடி மதிப்பிலான 1.64 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கப் பசையைத் தங்களது காலணிகளில் (ஷூக்களில்) மறைத்து வைத்து வெளியே கடத்த முயன்ற சென்னை சர்வதேச விமான நிலைய ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இருவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கித் தங்களது குடியுரிமைச் சோதனைப் பகுதியை நோக்கிக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சென்னை விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றும் இருவர், பயணிகள் குடியுரிமைச் சோதனைக்குச் செல்லும் வழித்தடத்தில் உள்ள கழிவறை அருகே நீண்ட நேரமாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருப்பதைச் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர்.

அவர்கள் இருவருக்கும் விமான நிலையத்தின் தரைத் தளத்தில் மட்டுமே பணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தங்களுக்குத் தொடர்பில்லாத மேல்தளக் கழிவறைப் பகுதியில் முகாமிட்டிருந்தது அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திச் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறித் திணறினர். சந்தேகமடைந்த அதிகாரிகள், இருவரையும் உடனடியாகத் தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர உடற்சோதனைக்கு உட்படுத்தினர்.
இதையும் படிங்க: வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!
அப்போது, தூய்மைப் பணியாளர்கள் இருவரும் தாங்கள் அணிந்திருந்த ஷூக்களுக்குள் கருப்பு நிற டேப்பால் இறுக்கமாகச் சுற்றப்பட்ட பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது அப்பட்டமாக அம்பலமானது. அந்தப் பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் உயர் ரக 24 கேரட் தங்கப் பசை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரிடமிருந்தும் மொத்தம் 1.64 கிலோ எடையுள்ள தங்கப் பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில், துபாயில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலையக் கழிவறையில் தங்களை நேரில் சந்தித்து இந்தத் தங்கப் பசையைக் கொடுத்ததாகவும், சுங்கச் சோதனையைத் தாண்டி இதனை வெளியில் கொண்டு வந்து கொடுத்தால் குறிப்பிட்ட கமிஷன் தருவதாகக் கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதற்கிடையில், தூய்மைப் பணியாளர்கள் சுங்கத்துறையிடம் வசமாகச் சிக்கியதை அறிந்த அந்த முக்கியக் கடத்தல் பயணி, சோதனைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க விமான நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!