தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமான 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 17 காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உடனடியாகத் துறைவாரியான நடவடிக்கைகள் மேற்கொண்டு, கிரிமினல் குற்ற வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ(எம்)) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழ்நாடு அரசுக்கு மிகக் காட்டமான அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை மற்றும் வரம்பு மீறிய அடக்குமுறையால் மக்களைக் கொல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பலியாயின.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம், 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 17 காவல்துறையினர், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இக்கொடூரத்திற்கு நேரடிக் காரணமானவர்கள் என்று அறிக்கை அளித்து, அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையுடன் குற்ற வழக்குகளைப் பதிவு செய்து விசாரிக்கத் திட்டவட்டமாகப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், நேற்று (31.08.2026) உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துகள் அப்பட்டமாகக் கொலைக்குக் காரணமான அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "போதாது"..! மேட்டூர் அணையை 120 நாட்கள் திறக்கணும்... சிபிஎம் சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை..!!
தொடர்ந்து அறிக்கையில் சாடியுள்ள அவர், இவர்களில் எவருமே தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. இது அரசு அமைப்புகள் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாகவே இயங்குகின்றன என்பதற்கான வெளிப்படையான சான்றாகும். அந்த வகையில் அதிகாரிகளைப் பாதுகாப்பதில் முந்தைய திமுக அரசும், தற்போதைய தவெக அரசும் ஒரே மாதிரியான மக்கள் விரோத நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.
பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனைப் பாதுகாப்பதற்காகவே அதிகார வர்க்கத்தின் அடியாள்களாகச் செயல்பட்ட குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை. ஜனநாயக நாட்டில் அரசாங்கம் இத்தகைய போக்கைக் கையாள்வது குடிமக்களுக்கு நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று ஆவேசம் தெரிவித்துள்ளார்.
எனவே, முந்தைய அரசு அதிகாரிகள் விவகாரத்தில் கையாண்ட தவறான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பொறுப்பான அனைத்து உயர் அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் படுகாயமடைந்தவர்களுக்கும் விசாரணை ஆணையம் பரிந்துரைத்த முழு இழப்பீட்டுத் தொகையையும் எவ்வித இழுத்தடிப்பும் இன்றி உடனடியாக வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் தமிழக அரசை பெ.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கையகப்படுத்திய நிலங்களை திருப்பி கொடுங்க.! பரந்தூர் விஷயத்தில் CPM சண்முகம் முக்கிய கோரிக்கை.!!