உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் சித்திரைத் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் மாபெரும் அன்னதானத் திருக்கல்யாண விருந்துக்கு அரசு தடை விதித்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் அமைதியாக நடந்துவரும் இந்த மக்கள் நிகழ்வில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது? என்று நீதிபதிகள் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் ஆன்மிக மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த தண்டீஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாணத்தின் போது சேதுபதி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவசத் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையும் படிங்க: தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலின் மனு: மிலானி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

பொதுமக்கள் மனமுவந்து வழங்கும் அரிசி, காய்கறிகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட நன்கொடைகளைக் கொண்டும், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் உழைப்பாலும் சாதி, மத பேதமின்றி அமைதியான முறையில் இந்த விருந்து உபசரிப்பு நடைபெறுகிறது என்றும், பள்ளி விடுமுறைக் காலத்திலேயே இது நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்றும் மனுவில் விளக்கப்பட்டிருந்தது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த பொதுவான அரசாணை அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 25, 26 மற்றும் 29 ஆகிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் இந்தத் திருக்கல்யாண விருந்துக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் மனுதாரர் தரப்பில் ஆணித்தரமாக வாதிடப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், பல தலைமுறைகளாக அமைதியான முறையில் மத நல்லிணக்கத்துடன் நடைபெற்று வரும் நிகழ்வுக்கு ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்துத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சீமைக்கருவேலம் அகற்றும் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்!