கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் சட்டவிரோத கனிமவள கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்குள்ள கல்குவாரிக்கு 2022-ல் ரூ.23.55 கோடி அபராதம் விதிக்கப்பட்டும் அது தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த கொள்ளைக்கு எதிராக செய்தி சேகரிக்கச் சென்ற திருச்சி தனியார் டிவி (நியூஸ் தமிழ் 24x7) நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
நிருபர் கதிரவன் மற்றும் செபாஸ்டின் ஆகியோர் கல்குவாரி பகுதிக்கு ட்ரோன் உதவியுடன் வீடியோ எடுக்கச் சென்றனர். அப்போது சுமார் 50 பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியது. கேமரா, மைக், ட்ரோன், செல்போன் உள்ளிட்ட உபகரணங்களை பறித்து எடுத்து சேதப்படுத்தினர்.
இதையும் படிங்க: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!
கொலை வெறியுடன் தாக்கியதால் நிருபர் கதிரவன் மற்றும் செபாஸ்டின் படுகாயமடைந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டது.
இதையடுத்து கிருஷ்ணராயபுரம் போலீசார் தனிப்படையுடன் சென்று அவர்களை மீட்டனர். காயமடைந்தவர்களை குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலுக்கு ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி ஆதரவாளர்கள் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்குவாரி எம்எல்ஏவின் மகன் விமலநாதன் தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது. எம்எல்ஏவின் மகன் தரப்பில் ஆடியோ வெளியாகி, வீடியோக்களை அழிக்க முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர்கள் நல அமைப்புகள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று பலரும் கூறுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் இது குறித்து கேட்டனர். அமைச்சர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "இந்த சம்பவம் என் கவனத்துக்கு வரவில்லை. நான் பார்க்கவில்லை. சட்டத்துக்கு புறம்பான எந்த செயலும் கண்டிக்கத்தக்கது. தெரிந்து கொண்டு பதில் கூறுகிறேன்" என்றார்.
செய்தித்துறை அமைச்சராக இருந்தும் இந்த தாக்குதல் தனக்கு தெரியவில்லை என்று கூறியது பெரும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வது கவலை அளிப்பதாக பலரும் கூறுகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நீங்க தான் தைரியமான ஆளாச்சே! செஞ்சு காட்டுங்க!! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்த டெரர் டாஸ்க்!